★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Saturday, March 26, 2016

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு

  

வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலேனா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.
அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினார். அப்பொழுது வான தூதர் அப்பெண்களைப் பார்த்து, நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசு வைத் தேடுகிaர்கள் என எனக்குக் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார் என்றார் (மத் 28:1-6).
இறந்த பின் தானாக உயிர்த்தொழுவது இறைவனுக்கு மட்டுமே சாத்தியமாகும் மாபெரும் காரியம் ஆகும். மனிதரால் சாக முடியும். ஆனால் உயிர்த்தெழ முடியாது. அதனால் தான் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு அவரது இறைத்தன்மையின் அடையாளமாக விளங்குகின்றது. அதுவே நமது நம்பிக்கையின் ஆதாரம். மூலைக்கல்.
அதனால்தான் திருத்தூதர் பவுல், கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் என்று கூறினார். (1 கொரி 15:14).
இறப்பதும் இறந்தவரை புதைப்பதும் சாதாரணமான காரியம்தான். ஆனால் கல்லறையில் காவல் இருப்பது அபூர்வமான காரியம். இயேசு இறந்து விட்டார் என்று உறுதி செய்த பின்னரும், அவரை அடக்கம் செய்த கல்லறைக்கு முத்திரையிட்டு காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்த பின்னரும் கூட தலைமைக் குருக்களுக்கும் பரிசேயர்களுக்கும் ஐயம் நீங்கவில்லை.
அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள். (மத் 27:66).
இயேசுவின் சீடர்கள் எல்லாம் முடிந்துவிட் டது என்று நினைத்து அஞ்சி நடுகினர். வாரத் தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலேனா மரியாவுக்குத் தோன்றினார்.
அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய் களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுது கொண்டிருந்தார்கள்.
அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. (மாற் 16:9-11).
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று வாழ்த்தினார். (யோவா 20:19).
இயேசு வெற்றிபெற்ற வீரரைப் போல் அல்ல உயிர்த்தெழுந்தும் உயிர்த்தெழுந்தபின் காட்சியளித்ததும். அவர் சீடர்களுக்குத்தான் காட்சியளித்தார். அவர் தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களிடம் அவர்களைப் பழிவாங்கச் செல்லவில்லை. பிலாத்திற்கோ தலைமைக் குருக்களுக்கோ செல்லவில்லை. பிலாத்திற்கோ தலைமைக் குருக்களுக்கோ பரிசேயர்களுக்கோ காட்சியளித்து அவர்களை அச்சுறுத்தவும் இல்லை.
நண்பர்கள் தங்களுக்குள் உரையாடுவது போல் அவர் சீடர்களிடம் பேசினார். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது இயேசு அவர்கள் நடுவில் நின்று உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று அவர்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் அவர்களிடம், உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார். (லூக் 24:36-43).
தாம் அன்பு செய்பவர்களின், தம்மை அன்பு செய்பவர்களின் கவலை ஐயம் நீக்கவே ஆண்டவர் அவர்கள் முன் தோன்றினார். உலகு தரும் அமைதியைப் போன்றதல்ல ஆண்டவர் இயேசு தரும் அமைதி.
சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களுக்கும் துன்புறுவோர்க்கும் அவர் தரும் அமைதி! இதை எவராலும் அழிக்க முடியாது!
உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடும் வேளையில் உயிர்ப் பின் வல்லமையும் மாட்சிமையும் நமது வாழ்விலும் விளங்க வேண்டும். நம்முள் குடிகொள்ளும் தீமையின் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும், நம்மைவிட்டு வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் உயிர்ப்பின் அருள் நமக்குக் கிடைக்கும்.
தீமை நிலைக்காது என்பதைத்தான் இயேசுவின் உயிர்ப்பு வெளிப்படுத்துகின்றது. தீய சக்திகள் கட்டியெழுப்பிய கல்லறை தகர்ந்தது. அவை உருவாக்கிய பாறைகள் பிளந்தன.
அவ்வாறு தீமையை அடித்தளமாகக் கொண்ட அனைத்தும் அழியும் உண்மையை நிரந்தமாகக் கல்லறையில் அடைத்து வைக்க முடியாது. இதைத் தான் இயேசுவின் உயிர்ப்பு வெளிப்படுத்துகின்றது.
சாவுக்குப்பின் வாழ்வு உண்டு என்பதையும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு வெளிப்படுத்துகின்றது. மனித வாழ்வு சாவோடு முடிவதில்லை. மாறாக அது அழியாமையை அடையும் நிலை வாழ்வுக்குச் செல்லும்.
திருத்தூதர் பவுல் பின்வருமாறு போதிக்கின்றார். இறந்தோர் உயிர்த்தெழும் போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவதும் அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.
மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு. மறை நூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார். கடைசி ஆதாமோ உயிர்தரும் துய ஆவியானார்.
முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர், அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
(1 கொரி 15:42-49).
இறந்த பின் நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் களைந்துவிட்டு விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்போம் என்று திருத்தூதர் பவுல் போதிக்கின்றார்.
மனித வாழ்வு இம்மண்ணுலகோடு முடிவதில்லை என்றும் விண்ணக நிலைவாழ்விற்கான ஆயத்தம்தான் மண்ணுலகில் நடக்கிறது என்றும் நமது வேதம் போதிக்கின்றது.
இதை நாம் முழு. இதயத்தோடு ஏற்றுக்கொள்வோம். உலகு சார்ந்த இச்சைகளையும் நாட்டங்களையும் சிலுவையில் அறைவோம். அப்போது இயேசுவின் உயிர்ப்பில் பங்கு கொள்ளும் நற்பேறும் நமக்குக் கிடைக்கும்.
கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்லை அதன் இழி வுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள் (கலா 5:24).

No comments:

Post a Comment