கர்த்தருடைய நாள் வருகிறது! ஆயத்தமா?
கர்த்தருடைய
நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று
அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும்
எரிந்து அழிந்துபோம். - (2பேதுரு 3:10).
.
சமீப
காலமாக சென்னை வானிலை ஆராய்சசி மையத்தின் செய்திகளையும், அடிக்கடி திரு
ரமணன் அவர்களும், சென்னையின் வானிலை குறித்து இன்று இடியுடன் கூடிய மழை
பெய்யும் என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். கடலோர மீனவர்கள் கடலுக்குள்
செல்ல வேண்டாம் என்று எச்சரிப்பதையும் கேட்டிருக்கிறோம்.
.
அமெரிக்காவில் கத்ரினா, ஐசக் போன்ற புயல்கள் தாக்கும்போது, உடனே
ஜனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கடலோரத்தில் குடியிருக்கிறவர்கள், உடனே
காலி செய்து, வேறு இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அதை
கேட்ட மக்கள் பீதியடைந்து உடனே தங்கள் இடங்களை விட்டு பெட்டி படுக்கைகளுடன்
வேறு இடம் செல்கிறார்கள்.
.
சுனாமி இந்தோனேஷியாவில் தாக்கியதும், சுனாமி எச்சரிக்கை என்று அடிக்கடி
மக்கள் எச்சரிக்கப்பட்டு, கடலோரத்தில் குடியிருப்பவர்கள் பத்திரமாக மேல்
மட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்போது, அவர்கள் உடனே
அப்படி செல்கிறார்கள். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தெரியும், தாங்கள்
அப்படியே இருந்தால், சுனாமி வந்து எல்லாவற்றையும் வாரி கொண்டு போகும்
என்று.
.
இப்படிப்பட்ட எச்சரிப்புக்களுக்கு உடனே செவி கொடுக்கும் மக்கள், கர்த்தரின்
பயங்கரமான நாள் வருகிறது என்று சொல்லும்போது, அதற்கு மட்டும் தங்கள்
செவியை விலக்கி, கீழ்ப்படிய மறுக்கிறதை நாம் கண்கூடாக கண்டு
கொண்டிருக்கிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவ கோபாக்கினையின் ஏழு
முத்திரைகள், ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள், ஏழு கோப கலசங்கள் என்று இந்த
உலகத்தில் கைவிடப்பட்டவர்களின் மேல் ஊற்றப்பட இருக்கிற தேவ கோபாக்கினைக்கு
தப்பும்படி, கிருபையின் நாட்களில் கர்த்தரை ஏற்று கொள்ளும்படி
அறிவுறுத்தப்பட்டும், தங்கள் இருதயத்தை கடினப்படுத்தி கொண்டிருக்கும்
மக்கள் எத்தனை எத்தனை பேர்?
.
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள்
மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள
கிரியைகளும் எரிந்து அழிந்துபோம் என்று வேதம் தெளிவாக கூறியும், தேவ
கோபாக்கினை வரும்போது இந்த உலகத்தில் என்னென்ன நடக்க இருக்கிறது என்று
தெளிவாக வேதத்தில் கூறப்பட்டிருப்பதை அறிந்தும், உணர்வில்லாதவர்களாக, உலக
வாழ்க்கை உல்லாசமாக அனுபவித்து கொண்டிருக்கும் மக்கள் எத்தனை பேர்?
.
பிரியமானவர்களே, உலகம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. காலம்
இனி செல்லாது, கர்த்தரின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது. உலகத்தின்
அக்கிரமம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறதை நாம் ஒவ்வொரு நாளும்
செய்தித்தாளில் பார்த்து கொண்டிருக்கிறோம். வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற
தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி முடியும் காலத்தில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
.
தேவ கோபத்திற்கு நாம் தப்பித்து கொள்ள வேண்டும் என்றால் நாம்
வந்தடையத்தக்க புகலிடமாக, கன்மலையாக கிறிஸ்து ஒருவரே நமக்கு வழியாக
இருக்கிறார். அவரிடத்தில் வருகிறவரை புறம்பே தள்ளாதவர், அவரிடத்தில் நம்
பாவங்களை அறிக்கை செய்து, அவரை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது,
வரும் கோபத்திற்கு தப்பி, அவரோடு கூட நாம் என்றென்றும் நித்திய காலமாக
பரலோகத்தில் வாழ முடியும்.
.
இந்த எச்சரிப்பின் சத்தத்திற்கு நாம் செவிகொடாமற் போனால், ஏழு
முத்திரைகள், ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள், ஏழு கோப கலசங்கள் வழியாக
சென்று, அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் மகா உபத்திரவ காலத்தில் அவனுடைய
முத்திரையை தரித்துக்கொண்டு, அவனுக்கு அடிமையாக, நித்திய நித்தியமாக நரக
அக்கினியில் வேதனைப்பட வேண்டி வரும். தேவன் அன்பாகவே இருக்கிறார். ஆனால்,
அவருடைய சத்தத்திற்கு நாம் கீழ்ப்படியாமற் போகும்போது, அவராலும் நம்மை
காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு போகும். இன்றே இரட்சண்ய நாள், கர்த்தரை
ஏற்றுக்கொண்டு, அவரோடு கூட என்றென்றும் பரலோகத்தில் வாழும்படி நம்மை
ஒப்புக்கொடுப்போமாக! கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! அநேக பரிசுத்தவான்கள்
ஆயத்தம்! நீங்கள் ஆயத்தமா? மேகங்களின் மீது அவர் வரும்போது, அவருக்கு
எதிர்கொண்டு சென்று அவரோடு என்றென்றுமாய் வாழுவோமாக! மாரநாதா! ஆமென்
அல்லேலூயா!
.
இந்த மேகங்களை கடந்து
மோட்ச நாடு சேர்ந்திடுவோம்
இயேசுவோடு வாழ்ந்திருப்போம்
இயேசுவோடு மகிழ்ந்திருப்போம்
. மாரநாதா அல்லேலூயா
மாரநாதா அல்லேலூயா . நம் மீட்பு மிக சமீபம்
தலைகளை உயர்த்திடுவோம்
மணவாளன் இயேசு வருகின்றார்
மகிமையில் சேர்ந்திடுவோம்
|
No comments:
Post a Comment