★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Saturday, September 14, 2019

கடனே இல்லாத வாழ்க்கை


         ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள். - (ரோமர் 13:8).
.
          கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாம் ஒவ்வொருவரும் பண விஷயத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். இது வேதம் நமக்குக் கூறும் அறிவுரையாகும். அதிலும், 'ஒன்றிலும் ஒருவருக்கும் கடன்படாதிருங்கள்' என்றும் வேதம் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறது. உலகம் கூறுவது என்னவென்றால், 'இன்று வாங்கி நாளை செலுத்துங்கள்' என்று.  ஆனால் 'இன்று சேமித்து நாளை வாங்குவதே' உத்தமமானது.
.
         சமீபத்தில் ஒரு முக்கியமான இடத்தில் ஒரு கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கும்படி ஒரு குடும்பத்தினர் தீர்மானித்தனர். அதன் விலையை விசாரித்தபோது, அது 90,00,000 என்று தெரிய வந்தது. அந்த இடம் மிகவும் முக்கியமான இடத்தில் இருந்ததால் எப்படியாவது அதை வாங்க வேண்டும் என்று கணவர் ஒரு பேங்கில் போய் கடன் கேட்டார். அந்த பேங்க் ஆட்கள், உங்களிடமுள்ள சொத்து, பத்திரம் எல்லாவற்றையும் காட்டுங்கள் என்று சொல்லி, சொந்த வீடு இருந்ததால் அந்த வீட்டிற்கு வந்து அதன் அளவை அளக்க தொடங்கினார்கள்.
.
அந்த குடும்பத்தினர் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக இருந்தபடியால், அந்த மனைவி, கர்த்தரிடம் அதை குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். 'இயேசப்பா, இந்த வீடு நீர் கொடுத்த வீடு, அதில் கண்டவர்கள் எல்லாம் வந்து அளவு எடுத்து கொண்டிருக்கிறார்களே, கணவரோ அத்தனை பணம் கொடுத்து அந்த கடையை வாங்க வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார், உமக்கு சித்தமில்லை என்றால் இதை நிறுத்திப்போடும்' என்று ஜெபித்தார்கள். நம் தேவன் பேசும் ஆண்டவரல்லவா? அன்றைய தின வேத வாசிப்பில் (அவர்கள் தினமும் நீதிமொழிகள் ஒரு அதிகாரத்தை வாசிப்பது வழக்கம்) கர்த்தர் அவர்களோடு பேசினார், 'கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே' (நீதிமொழிகள் 22:26-27). இந்த வார்த்தைகளை படித்த உடன் அந்த சகோதரிக்கு தேவனுடைய சித்தம் என்னவென்று புரிந்து விட்டது. கடன் வாங்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அறிந்து கொண்டார்கள். அந்த இடத்தை வாங்குவது கர்த்தருடைய சித்தம் அல்ல என்பதையும் புரிந்து கொண்டார்கள்.
.
            ஆனால் கணவரோ முழு மூச்சோடு அதை வாங்க வேண்டும் என்று பேங்கிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார், அவரை எப்படி தடுப்பது என்று நினைத்தவர்களாக ஜெபித்தார்கள். அடுத்த நாள், கணவர், மனைவியிடம், 'இன்று கணவனும் மனைவியுமாக அழைத்து பேங்க் மேனேஜர் பேசுவார், அதன்பின் அவர்கள் கடன் தருவார்கள்' என்று கூறினார்.
.
மனைவிக்கு தேவன் இப்படி வசனம் சொல்லியிருக்கிறார் என்று சொல்ல பயம், ஏனென்றால் கணவர் மிகவும் அதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று. அவர்கள் ஜெபித்து, 'நாளை ஆண்டவரே அந்த பேங்க் மேனேஜர் பேசும்போது, நீர் தடுத்து விடும்' என்று சொல்லி ஜெபித்து விட்டு, அடுத்த நாள் போனார்கள்.
.
                 அவர்கள் பேசி கொண்டிருக்கும்போதே, வீட்டை அளந்து பார்த்த ஒருவர், 'பத்திரத்தில் இருக்கும் அளவிற்கும், எழுதி இருக்கும் அளவிற்கும் வித்தியாசம் இருக்கிறது, ஆகவே அதை சரி செய்து முடிக்காமல் கடன் வழங்க முடியாது' என்று கூறினார். அதை கேட்ட கணவருக்கு மிகவும் கோபம். 'இத்தனை நாட்கள் நான் இங்கு வந்து போய் கொண்டிருக்கிறேன், அப்போதெல்லாம் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை, இப்போது கடன் தரும் நேரத்தில் இப்படி சொல்கிறீர்கள்' என்று. அப்போது மனைவி சொன்னார்கள், 'கர்த்தருடைய சித்தம் நாம் கடன் வாங்கி அந்த கடையை வாங்குவது அல்ல, கர்த்தர் அதை குறித்து என்னிடம் நேற்றே பேசி விட்டார்' என்று நடந்ததை கூறினார்கள். கணவரும் அதை கேட்டு, 'நேற்றே நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை' என்று கேட்டார். அதற்கு மனைவி, 'நேற்றே சொல்லியிருந்தால் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள், இன்று தேவனே அதை நிறுத்திப் போட்டார் பாருங்கள்' என்றார்கள். இது உண்மை சம்பவம். ஆம், நம் தேவன் நாம் கடன் வாங்குவதை விரும்புகிற தேவன் அல்ல. 'கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே' என்று நம்மை கடன் வாங்காதபடி எச்சரிக்கிற தேவனாயிருக்கிறார்.
.
       மட்டுமல்ல, அவர் நமக்கு வாக்குதத்தம் செய்திருக்கிறார், 'நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்'    (உபாகமம் 28:12) என்று. இந்த வாக்குதத்தத்தை நாம் தினமும் அறிக்கையிட்டு, என்னை ஒருபோதும் கடன் வாங்காதிருக்க உதவி     செய்யும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
          தவிர்க்க முடியாது ஒரு அவசரத்திற்க்கு நீங்கள் யாரிடமாவது பணத்தை கடன் வாங்கிளானல், அதை எவ்வளவு சீக்கிரம் திரும்ப செலுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் செலுத்தி விடுங்கள். ஒரு குறிப்பிட்ட தேதியில்  பணத்தை திரும்ப செலுத்துவதாக வாக்கு கொடுத்துவிட்டு, அது முடியவில்லையென்றால் கடன்பட்டவரிடம உங்களை தாழ்த்தி மன்னிப்பு கேளுங்கள். பணத்தை திரும்ப செலுத்த மேலும் அவகாசம் தரும்படி வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்யாமல், வசதியான நேதர்தில் திரும்ப செலுத்தலாம் என எண்ணுவது அநீதியான செயலாகும்.

          ஒருவேளை கடன் கொடுத்தவர் எங்கிருக்கிறாரென்று தெரியவில்லை என்றால், அந்த பணத்தை தேவப்பணிக்கென்று கொடுத்து விடுங்கள். ஏனென்றால் இந்த பூமியின் சகல நிறைவும், முடிவாய் கர்த்தருக்கே சொந்தமாகும் (எண்ணாகமம் 5:8). ஆம், இது போன்ற பணத்தை நாம் நம்மிடம் வைத்திருக்க கூடாது. ஏனென்றால் நியாயமாய் நமக்கு சொந்தமாயிராத பணம் நம்மிடம் இருக்குமென்றால் அதில் சாபமே தங்கியிருக்கும்.
.
         மேலும் கடந்த காலங்களில் நாம் தவறான முறையில் பெற்றுக் கொண்ட எல்லா பணத்தையும் திரும்ப செலுத்த வேண்டும். முழுவதுமாக செலுத்தி தீர பல வருடங்கள ஆனாலும் அது ஒரு பொருட்டல்ல, இவ்விதமாய் திரும்ப செலுத்துவதை சகேயு தீர்மானித்த அடுத்த கணமே அவனுடைய வீடு இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டது. நீங்கள் இவ்வித தீர்மானங்களை எடுக்கும்போதே உங்களுடைய வீடும் இவ்விமாய் ஆசீர்வதிக்கப்படும். உங்களுடைய கடன் ஏராளமாய் இருப்பதால் நீங்கள் சோர்ந்து போகத் தேவையில்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அது மாதத்திற்கு பத்து ரூபாயானாலும் அதை தீரும்ப செலுத்த ஆரம்பித்து விடுங்கள். நீங்கள் எல்லவற்றையும் கொடுத்து தீர்த்து விட்டீர்களா என்பதின்படியல்ல, உங்களால் முடிந்த அளவு திரும்ப செலுத்த நினைக்கும் உங்கள் மன விருப்பத்தை கொண்டே தேவன் உங்களை ஏற்றுக் கொள்வார்.
.
           ஆம், பிரியமானவர்களே, நாம் பண விஷயத்தில் தேவனுக்கு முன்பாகவும், மனிதருக்கு முன்பாகவும் உண்மையாயிருக்க இன்றே தீர்மானிப்போம். ஒருவன் பண விஷயத்தில் உண்மையுள்ளவனாக இருந்தால் மற்ற காரியங்களை அவனை நம்பி நாம் ஒப்படைக்க முடியும். அப்படிப்பட்ட உண்மை நம்மில் இருந்தால் தேவன் நம் குடும்பத்தை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா! 

.
 
  இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
  வாழ தேவையான வசதி தந்தீர்
  கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
  கடனே இல்லாமல் வாழ வைத்தீர்
.
 
நன்றி தகப்பனே
 நன்மை செய்தீரே

 ஜெபம்

         எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்குதத்தம் எங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிறைவேறட்டுமையா. நாங்கள் கடன் வாங்காமலே குடும்பத்தை நடத்தும்படியான கிருபையையும் ஞானத்தையும் தருவீராக. கடன் வாங்கி அதை செலுத்த முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம். அதை எப்படியாவது திரும்ப செலுத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்து, கொஞ்ச கொஞ்சமாக அதை செலுத்தி முடிக்க கிருபை செய்யும். அநியாயமாய் சம்பாதித்த பொருள் ஒன்றும் ஒருவரிடமும் இல்லாமல், அதை திரும்ப செலுத்திவிட கிருபை செய்வீராக. பண விஷயத்தில் உண்மையாய் நடந்து கொள்ள கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


No comments:

Post a Comment