★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Friday, December 7, 2012

துதியின் வல்லமை


          அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். - (2நாளாகமம்-20:22).
.
           நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிரியமானவர்களை புகழுகிறோம். சிலர், தஙகள் மேல் இருக்கும் அதிகாரிகளை புகழுவார்கள், சிலர் தங்கள் துணைவர்களை புகழுவார்கள், சிலர் தங்கள் பிள்ளைகளை புகழுவார்கள். ஆனால் நாம் கர்த்தரை புகழுகிறோமா? அவரைத் துதிக்கிறோமா?
.
             ஒரு ஆலயத்தில் போதகர் சபையை நடத்திக் கொண்டு இருந்த போது, மூன்றுப் பேர் நடுஆராதனையில் அலட்சியமாக வந்து அமர்ந்தனர். போதகர் செய்தி வேளையை ஆரம்பித்தபோது, அவர்களில் தலைவனாகக் காணப்பட்டவன் எழுந்து நின்று, ‘போதகரே, நீர் பேசுகிற காரியங்களை நீர் முதலில் விசுவாசிக்கிறீரா?’ என்றுக் கேட்டான், அதற்கு அவர் பதிலளித்து விட்டு, தன் செய்தியைத் தொடர்ந்தார். திரும்பவும் ஐந்து நிமிடங்கள் கழித்து அவன் திரும்பவும் எழுந்து, வேறுக் கேள்வியைக கேட்டான். அதற்கு போதகர்,  ‘நீர் கேட்ட கேள்விக்கு ஆராதனை முடிந்தவுடன் பதிலளிக்கிறேன் இப்போது உட்காரும்’ என்றுக் கூறினார். திரும்பவும் ஐந்து நிமிடங்கள் கழித்து, அவன் வேறுக் கேள்வியைக் கேட்டவுடன், போதகருக்கு புரிந்து விட்டது, இது ஆவிக்குரிய போர் என்று. உடனே, ‘உன்னை இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்துக் கொள்கிறேன் இந்த ஆலயத்தை விட்டு வெளியேப் போ’என்றுக் கடிந்துக் கொண்டார்.
            அதைக் கேட்டவுடன் மற்ற இருவரும் ஆலயத்தை விட்டு வெளியேப் போனார்கள். ஆனால் அந்த மனிதனோ, திரும்ப பேச ஆரம்பித்தான், அப்போது போதகர், தனது ஆலயத்தின் மூப்பர்களை நோக்கி,  ‘இந்த மனிதனை வெளியே அனுப்புங்கள்’  என்றுக் கட்டளைக் கொடுத்தார். அவர்கள் அந்த மனிதனை நெருங்கவும், அவன் கெட்ட வார்த்தைகளாலும், மற்ற வார்த்தைகளாலும் தூஷிக்க ஆரம்பித்தான். அப்போது யாரும் எதிர்பாராதவாறு சபையார் எல்லாரும் எழுந்து நின்று தேவனை சத்தமாய் துதிக்க ஆரம்பித்தார்கள். அந்த சத்தத்தை அவன் கேட்டானா இல்லையோ, அவன் குழம்ப ஆரம்பித்து, சபையை விட்டே ஓட ஆரம்பித்தான். எல்லாம் அமைதியானபோது, போதகர் தனது சபையில், ‘தேவன் துதியின் வல்லமையை நாம் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் காரியத்தை அனுமதித்தார்’ எனக் கூறினார்.
.
                நமது போராட்ட வேளையிலும், தேவனை நாம் துதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். துதியினால், தேவ பிரசன்னத்தையே நாம் இந்த பூமியிலேக் கொண்டு வர முடியும். துதியின் மத்தியில் வாசம் பண்ணுகிற தேவன் நம் தேவன். கேரூபீன்களும் சேராபீன்களும் ஓயாமல் புகழ்ந்துப் பாடிக் கொண்டிருக்கும் துதிகளின் மத்தியில் அவர் வாசம் பணணுகிறவர். அவர் நாம் துதிக்கும் வேளையில் இறங்கி வந்து,  நம்மை ஆசீர்வதிக்கிறார். ‘தம் நாமத்ததை பிரஸ்தாபம் பண்ணும் எந்த இடத்திலும் வந்து ஆசீர்வதிப்பேன்’  என்றவர் துதிக்கிற நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். நமது தேவைகளை சந்திப்பார்.
.
            துதியின் சத்தத்தில் சத்துரு வாசம் பண்ண முடியாது. உங்களுக்கு பிரச்சனைகள் வரும்போது,  நீஙகள் தேவனை துதிக்க ஆரம்பியுங்கள். உங்கள் பிரச்சனை தானாக மாறுவதை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் துன்பங்களினாலும், உயிருக்குயிரானவர்களை இழந்ததினாலும் துக்கத்தோடு இருக்கிறீர்களா? அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை என்றுச் சொல்கிறீர்களா? தேவனை துதிக்க ஆரம்பியுங்கள், உங்கள் சோர்வுகள்,  துக்கங்கள் மறைய ஆரம்பிக்கும். சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்,  அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். - (ஏசாயா 61:3) என்ற நாம் வாசிக்கிறோம். ஆம், அவர் நமக்கு ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையைக் கொடுத்திருக்கிறார்.
           அவரை துதிக்க துதிக்க துயரம் நீங்குவதையும் கிருபை பெருகுவதையும் கண்கூடாக காண்பீர்கள். ஆகவே துதிப்போம், சாத்தானை ஜெயிப்போம். துதிக்கு முன்பாக ஒரு எரிகோ கோட்டையால் நிற்க முடியவில்லை. துதிக்கு முன்பாக, எதிரிகள் புறமுதுகிட்டு ஓடினர். துதிக்கு முன்பாக, எதிரிகள் ஒருவருக்கொருவர் வெட்டுண்டு விழுந்தார்கள். துதிக்கு முன்பாக சாத்தான் நிற்க முடியாது. அவன் வெட்கப்பட்டு ஓடுவான். துதிப்போம் சாத்தானை மேற்கொள்வோம் ஆமென் அல்லேலூயா!
.
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம்  

ஜெபம்

            எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, துதியின் வல்லமை அறிந்த விசுவாசிகள், சத்துருவின் மேல் வெற்றியை எடுத்ததைப்போல நாங்களும், துதித்து துதித்து சாத்தானின் மேல்  வெற்றி எடுக்க கிருபைச் செய்யும். இயேசுவின் படையாக எழும்பி துதித்து,  ஜெபித்து தேசத்தை உமக்கு சொந்தமாக்க கிருபைச் செய்யும். ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் சத்;துருவின் போராட்டங்களை,  துதியினால் மேற்கொள்ள,  வெற்றி எடுக்க ஒவ்வொரு விசுவாசிக்கும் கிருபைச் செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



No comments:

Post a Comment